வட மாநிலங்களில் வெயிலின் தாக்குதலுக்கு நாளுக்குநாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
நாட்டின் பல பகுதிகளில் நீடித்து வரும் கொடூர வெப்பத் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 143-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே நிலவும் வெப்ப அலையின் காரணமாக பாதிப்பு அதிகரித்து வருகின்றது. வெப்ப அலையை தாங்க முடியாமல் பலரும் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. மார்ச் 1 முதல் ஜூன் 20 வரையிலான தரவுகளின் படி கடுமையாக வீசிவரும் வெப்பத் தாக்குதலுக்கு இதுவரை 143 பேர் பலியாகியுள்ளனர். 41,789 பேர் வெப்பம் தொடர்பான பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர்.
குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலம் வெப்பத் தாக்குதலுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 35 பேர் உயிரிழந்துள்ளனர். அதைத்தொடர்ந்து தில்லியில் 21, பீகார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 17 இறப்புகளும் பதிவாகியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் பால்யா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளால் குறைந்தது 400 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதில் ஒரு சிலர் மாரடைப்பு, மூளைவாதம், வயிற்றுப்போக்கு காரணமாக மரணமடைந்து வருவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், பல மாநிலங்களில் இருந்து புதுப்பிக்கப்பட்ட தரவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், பாதிப்பும், உயிரிழப்பும் மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.